மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக குறைந்ததை அடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபர்நீர் திறப்பது ஒருவாரத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதையடுத்து, அங்கிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு கடந்த சில தினங்களாக அதிகரித்தது. iதன் காரணமாக, கடந்த மாதம் 25ஆம் தேதி மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இது இந்தாண்டின் 4-வது முறையாக நிரம்பியது.
மேட்டூர் அணை நிரம்பிய நிலையிலும், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால், 16 கண் மதகுகள் அன்று இரவு முதல் திறக்கப்பட்டன. பின்னர், அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. அதாவது, அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டது.
இதனால், 16 கண் மதகுகள் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 92 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த சூழலில் தான், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் குறைய ஆரம்பித்தது.
கடந்த நான்கு நாட்களாகவே மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. அந்த வகையில், நேற்றிரவு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரானது நீர் மின் நிலையங்கள் வழியாகவே திறந்து விடப்படுகிறது. எனவே, மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீரானது, ஒரு வாரத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply