’பாபநாசம்’ படத்தை கண்முன் நிறுத்திய சம்பவம்.. கணவனால் மனைவி, மாமியாருக்கு நேர்ந்த சோகம்..

கமல்ஹாசனின் பாபநாசம் பட பாணியில் கொலை செய்து உடலை தோட்டத்தில் புதைத்து அதன் மீது வாழைக்கன்று நட்டு வைத்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பாகல் கிராமத்தை சேர்ந்தவர் தேபாஷிஷ் பத்ரா. இவரது மனைவி சோனாலி (23). கணவன் – மனைவியான இருவருக்கும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஜூலை 12ஆம் தேதியும் வழக்கம்போல் இருவருக்கும் சண்டை வெடித்துள்ளது.

இந்த சண்டையை சமாதானம் செய்ய தேபாஷின் மாமியார் சுமதி முயற்சித்துள்ளார். ஆனாலும், முடியவில்லை. பின்னர், ஜூலை 19ஆம் தேதி குடும்பத் தகராறு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில், கணவர் தேபாஷ், ஆத்திமடைந்த நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியும், மாமியாரையும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

பின்னர், அன்றிரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில், கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்று அங்குள்ள எலுமிச்சை தோட்டத்திற்கு கொண்டு சென்று குழிதோண்டி புதைத்துள்ளார். பிறகு சந்தேகம் வரக்கூடாது என்பதற்கான அவர்களை புதைத்த இடத்தில் வாழைக் கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மறுநாள், தனது மனைவி மற்றும் மாமியாரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளித்தார். பின்னர், போலீசார் விசாரணை நடத்தியபோது, தேபாஷிஷ் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால், அவரது வீட்டை சோதனை செய்து பார்த்தனர். அப்போது, எலுமிச்சை தோட்டத்தை பார்வையிட்டபோது, அங்கு ஒரு பகுதியில் மட்டும் மண் தளர்ந்து காணப்பட்டது. மேலும், அந்த இடத்தில் வாழைக்கன்று நட்டு வைக்கப்பட்டிருந்தது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால், தேபாஷிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், தனது மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்து புதைத்துவிட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, தோட்டத்தில் புதைப்பட்டிருந்த அழுகிய நிலையில் இருந்த இருவரின் சடலங்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலை செய்த தேபாஷை கைது செய்தனர்.

Read More : இளம் தலைமுறையினர் தவிர்க்க வேண்டிய 10 அபாயகரமான பழக்கங்கள்..!! வெற்றிக்கு வழிகாட்டும் மாற்றங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *