சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.என். கார்டன் பகுதியை சேர்ந்த கருணாகரன் (48) என்பவர் சமையல் வேலை செய்து வருகிறார். அவரது வீட்டின் அருகே பூங்கொடி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், மாலை நேரத்தில் தனது வீட்டின் அருகே கருணாகரன் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது, பூங்கொடி தனது பிட்புல் ரக நாயை நடைபயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில், திடீரென கருணாகரனை சரமாரியாக கடித்தது. இதில் கருணாகரனின் ஆணுறுப்பு, தொடை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இருப்பினும், பிட்புல் நாய் கருணாகரனை மீண்டும் கடிக்க முயன்றது. அப்போது, இதை தடுத்த உரிமையாளர் பூங்கொடியையும் நாய் கடித்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு கே.கே.நகர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அங்கு கருணாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பூங்கொடிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.